Skip to main content

விருத்தாச்சலம் அருகே தனியார் பள்ளியின் சொத்துக்களை அபகரிக்க அமைச்சரின் மகன், மகள் முயற்சி : பள்ளியின் தலைவர் குற்றச்சாட்டு

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

விருத்தாச்சலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் செந்தில் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 1700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  விருத்தாசலத்தைச் சேர்ந்த டாக்டர் இளவரசன் பள்ளியின் அறக்கட்டளை தலைவராக  இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின், ஆதரவாளர்கள் சிலர் பள்ளிக்கூடத்திற்குள்  அத்துமீறி நுழைந்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அலுவலகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்த ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 

private school


இந்நிலையில் இதுகுறித்து அறிந்த பள்ளியின் தாளாளர் டாக்டர் இளவரசன் ஆதரவாளர்கள் பள்ளிக்கூடத்திற்குள் திரண்டு வந்ததால் அமைச்சர் எம் சி சம்பத்தின் ஆதரவாளர்கள் பள்ளியை விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் நேற்று காலையில் அமைச்சர் எம். சி சம்பத்தின் ஆதரவாளர்களான விருத்தாச்சலம் அதிமுக நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். அப்போது டாக்டர் இளவரசன் ஆதரவாளர்களும் பள்ளிக்கூடத்தில் இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் இருதரப்பினரும் அமர்ந்து பேசி அமைச்சர் சம்பத்திடம் பேசி முடிவெடுப்பது குறித்து ஆலோசித்தனர். இதனால் அப்பகுதியில் விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கைது செய்து கொண்டு செல்வதற்காக அரசு பஸ்சும்  பள்ளிக்கூட வளாகத்துக்குள் வந்து தயார் நிலையில் நின்றது. 

 

private school


இச்சம்பவம் குறித்து டாக்டர் இளவரசனும், அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தொலைபேசி வாயிலாக பேசி கொண்டனர்.  அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் இது குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் பள்ளியை விட்டு கலைந்து சென்றனர். 

private school


இந்நிலையில் இது குறித்து பள்ளியின் தலைவர் டாக்டர் இளவரசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது- செந்தில் அறக்கட்டளை கல்வி குழுமம் 2005 -2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கல்லூரிகளை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். சுமார் 1700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூடத்திற்கு 70 ஏக்கர் நிலம் மற்றும் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்தப் பள்ளிக்கும், அமைச்சர் எம்.சி. சம்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை அபகரிப்பதற்காக அமைச்சர் எம் சி சம்பத்தின் மகள் திவ்யா, மகன் பிரவீன் ஆகியோர் சொத்துக்களை அபகரிப்பதற்காக அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

private school

நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் பள்ளிக்கூடத்தின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தி அங்கிருந்த ஊழியர்களை துரத்திவிட்டனர். மேலும் நேற்று காலையில் பள்ளிக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து, பயமுறுத்தி இந்த பள்ளியை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் எம்.சி. சம்பத் தொலைபேசி வாயிலாக சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், பிறகு இதுபற்றி பேசிக் கொள்ளலாம், என்று கூறிவிட்டார். இவ்வாறு டாக்டர் இளவரசன் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். 

இந்நிலையில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் பள்ளியின் தலைவர் டாக்டர் இளவரசன் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதி அடைந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.