"அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான் என்றாலும் மக்கள் சார்ந்த பிரச்சனையில் இவர் எப்போதும் ஒதுங்கி நின்றதில்லை. அதிகாரிகள் துணையோடு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் நடத்தும் மாபெரும் முறைகேட்டுக்கு எதிராக இப்போது நேரடியாகக் களம் இறங்கியிருக்கிறார்" என ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வினர் கூறுவது முன்னாள் அமைச்சரும் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்தை தான். பெருந்துறை பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட கன்டிஷன் பட்டா நிலங்களை விதிமுறைகளை மீறி தனியாருக்கு விற்பனை செய்யும் வெளிப்படையான முறைகேட்டை இப்போது வெளியே கொண்டு வந்துள்ளார் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம்.
ஈரோடு சம்பத் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு இன்று காலை திடீரென வந்த தோப்பு வெங்கடாசலம் மாவட்ட கலெக்டர் கதிரவனை நேரில் சந்தித்து இந்த முறைகேடு பற்றி பேசினார்.
பிறகு, அவர் நம்மிடம் பேசுகையில், "1920-1923 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அரசால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், அரசின் விதிமுறைகளை மீறி தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நூறு ஏக்கருக்கும் அதிகமான பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள்தான் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம், மிகப்பெரும் விதிமீறல் நடந்திருப்பதாக தெரிவித்தேன்.
என்ன அநியாயம்? கன்டிஷன் பட்டாவை மாற்றியுள்ளார்கள். இந்த பல கோடி கொள்ளையில் பலருக்கும் பங்கு இருக்கிறது. இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த நிலத்தின் குறிப்பிட்ட பகுதி, அரசு தொழிழ்நுட்பக் கல்லுரி உட்பட சில அரசின் பயன்பாட்டுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இது தனியார்நிலம் என்று மாறினால் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களும் பறிபோகும். ஒரு சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். இந்த கொள்ளையை தடுத்து நிறுத்த மக்களை திரட்டி போராடுவேன். இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் விடக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக முறைப்படி வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதலமைச்சரை நேரில் சந்தித்துப் புகார் செய்வேன். முழுமையான விசாரணை நடத்த அவரிடம் வலியுறுத்துவேன்" என்றார்.
பெருந்துறை பகுதியில் உள்ள சில அ.தி.மு.க.வினரை நாம் விசாரித்தபோது, எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக அரசியல் நடத்திவரும் மாவட்ட அமைச்சரான கருப்பணன் ஆதரவு கூட்டம்தான், இந்த முறைகேடான நில விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது என்றும் இதற்கு உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.