Skip to main content

சின்னப் பள்ளிக்கூடத்திற்கு சிலம்பாட்டத்துடன் 'கல்வி சீர்' கொண்டு சென்ற அமைச்சர்!

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 


தமிழகத்தில் கல்வியாண்டின் இறுதி நாட்களில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து கௌரவிக்க விளையாட்டு, இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகளும், பாராட்டுகளும் வழங்குவது வழக்கம். அதிலும் கரோனா வந்த பிறகு பள்ளி விழாக்களே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகளில் மட்டுமே ஆண்டு விழா, பரிசளிப்பு விழாக்கள் நடந்திருக்கிறது. அதில் ஒன்று தான் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள வடகாடு 'புள்ளாச்சி குடியிருப்பு சின்னப் பள்ளிக்கூடம்'

 

சின்னப் பள்ளிக்கூடமா இருந்தாலும் மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் பாராட்டி பரிசுகளும், மரக்கன்றுகளும் மஞ்சள் பையில் வைத்து வழங்கினார்.

 

முன்னதாக நடந்த கல்வி சீர் வழங்கும் விழாவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்க, மேள தாளங்கள் முழங்க பெற்றோர்களும் கிராமத்தினரும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான பொருட்களை சீராக கொண்டு செல்ல ஊர்வலத்திற்கு முன்னால் பேரரசர் சிலம்ப கழக மாணவர்களின் சிலம்பாட்டம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

 

கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை நீண்ட நேரம் சிலம்பம், மான் கொம்பாட்டம், வாள் வீச்சுகளை பார்த்து ரசிக்க, அமைச்சர் மெய்யநாதன் சிலம்பாட்டத்தை பார்த்து வீரர்களை பாராட்டினார். தொடர்ந்து அமைச்சர், எம்எல்ஏ, கல்வி அதிகாரி உள்பட பலரும் கல்விச்சீர் தட்டுகளை பள்ளிக்குக் கொண்டு சென்றனர். வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் என்று ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பாராட்டினார்கள். எங்க பள்ளி ஆண்டு விழாவுக்கு நீங்கள் அவசியம் வரணும் என்று பள்ளி குழந்தைகளே வீடு வீடா போய் தாம்பூலத்தில் பாக்கு, வெத்தலை வைத்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்ததால் எந்த பெற்றோரும் வராமல் இல்லை. திறந்தவெளி மேடையில் சின்னப் பள்ளிக்கூட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் பெற்றோர்களை கவர்ந்தது. ஒரு பள்ளி ஆண்டு விழாவை ஊரே சேர்ந்து கொண்டாடியது.

 

விழா மேடையிலேயே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உறுதி அளித்ததோடு ஸ்மார்ட் வகுப்பறைக்கான தொகையினை அமைச்சர் மெய்யநாதன் மேடையிலேயே வழங்கினார். மேலும் அவர் பேசும் போது.. ''நானும் அரசுப் பள்ளியில் படித்துத்தான் வளர்ந்தேன். பல நாள் பட்டினியோடு படித்தேன். படிப்பு ஒன்று தான் அழியாத செல்வம். அதனால் பெற்றோர்களே பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். அதோடு விளையாட்டையும் தடுக்காதீர்கள். விளையாட்டு மாணவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.