Skip to main content

21 குண்டுகள் முழங்க மேஜர் உடல் தகனம்; நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சர்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Minister who gave the relief amount to major jeyanth family

 

அருணாச்சலப்பிரதேசம் மேற்கு கமெங் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் "சீட்டா" வகை ஹெலிகாப்டர் ஒன்று சாங் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினட் அதிகாரி இருவரும் விமானிகள் ஆக ஹெலிகாப்டரை இயக்கி சென்றுள்ளனர். காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அருணாச்சலப்பிரதேசம் மேற்கு பூண்டிலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இதன்பின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது. 

 

அருணாச்சலப்பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், விபத்தில் பலியான இரண்டு ராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் வி.வி.பி. ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் இவர்களில் ஜெயந்த் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஜெயமங்கலம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், மல்லிகா தம்பதியினரின் மகனான மேஜர் ஜெயந்த்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்லா சாராஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை.

 

இதனையடுத்து அவரது உடல் நேற்று நள்ளிரவு ராணுவ விமானத்தின் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு அங்கிருந்து இன்று காலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலைப் பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். தமிழக அரசு சார்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரடியாகச் சென்று ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதுபோல் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா, தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

 

மேலும் தமிழக அரசு அறிவித்த ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையும் ஜெயந்த் மனைவி செல்லா சாராஸ்ரீயிடம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ராணுவ உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி ராணுவ முறைப்படி அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அவரது தந்தை ஆறுமுகம் தீ மூட்டினார். ராணுவ வீரர் மரணத்தால் ஜெயமங்கலம் கிராமமே சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.