Skip to main content

2மணி நேரமாகியும் புறப்படாத அரசு பேருந்து... நேரில் வந்த அமைச்சரின் அதிரடி ஆக்‌ஷன்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Minister who arrived at the scene at an unexpected time
                                                          மாதிரி படம்

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்பகுதியில் உள்ள கிராம விவசாய மானாவாரி நிலங்களில் தற்போது பருத்தி, மக்காச்சோளம், விதைத்து வளர்ந்து வருகின்றன. இந்தப் பயிர்களுக்குள் ஊடுருவி வளர்ந்துவரும் புல் செடிகளை களை எடுப்பதற்காக பல்வேறு கிராமப்புற ஊர்களில் இருந்து பெண்கள் திட்டக்குடி கடந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று களை வெட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் தினசரி நீண்ட தூரம் சென்று களை எடுப்பதற்கு உதவியாக இருப்பது அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தான்.

 

இந்த பேருந்துகளில் பெண்கள் செல்வதற்குத் தமிழக அரசு பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதித்துள்ளது. இந்த சலுகை உழைக்கும் கிராமப்புற பெண்களுக்கு மிகவும் பேருதவியாக உள்ளது. அப்படி வேலைக்குச் சென்று விட்டு தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்காகத் திட்டக்குடி பஸ் நிலையம் வந்து பஸ் ஏறி செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை திட்டக்குடியில் இருந்து செவ்வேரி கிராமத்திற்குத் தினசரி மதியம் 12 மணி அளவில் செல்ல வேண்டிய அந்த பஸ் நீண்ட நேரமாகியும் புறப்படவில்லை. 40க்கும் மேற்பட்ட மகளிர் பொதுமக்கள் அந்த ஊர் வழியாக செல்வதற்கு  பஸ்ஸில் ஏறி அமர்ந்து காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்தும் அந்த பேருந்து புறப்படவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த பஸ்சை இயக்குவதற்கான கண்டக்டர் வரவில்லை அதனால் பஸ்புறப்படவில்லை என்று தகவல் கூறியுள்ளனர்.

 

Minister who arrived at the scene at an unexpected time

 

இதனால் கோபம் அடைந்த பெண் பயணிகள் திட்டக்குடி பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, மற்றும் திட்டகுடி டி.எஸ்.பி சிவன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏவுமான கணேசன் பொதுமக்கள் சாலை மறியல் செய்வதைக் கண்டு உடனே தனது காரை விட்டு இறங்கி பொதுமக்களிடம் சென்று குறைகளைகேட்டார். அப்போது பொதுமக்கள் கண்டக்டர் இல்லாததால் இரண்டு மணி நேரமாக பேருந்து செவ்வேரி கிராமத்திற்கு புறப்படவில்லை என்பதை தெரிவித்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் உடனடியாக திட்டக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் குமரகுருவை வரவழைத்துப் பேசி வேறு கண்டக்டரை நியமித்து பஸ்சை கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு நகரப் பேருந்துகளில் பெண்கள் கூட்டமாக செல்வதை அதில் பணி செய்யும் கண்டக்டர்கள், ஓட்டுனர்கள் விரும்புவதில்லை. பஸ் நிலையத்தில் நிற்கும் நகர பேருந்துகளில் பெண்கள் ஏறும்போது இந்த பேருந்து இப்போது செல்லாது, அந்தப் பேருந்தில் ஏறுங்கள் என்று கூறுவது வழக்கமாக உள்ளது. அந்த பேருந்தில் ஏறினால் இந்த பேருந்து இப்போது செல்லாது என்று அந்த நடத்துநர் இறக்கி விடுவதும் இப்படி பெண்களை அலைக்கழிக்க விடுகிறார்கள்.

 

வேறு வழியின்றி செல்லும் பேருந்துகள் பஸ் நிறுத்தங்களில் பெண்கள் நின்று பஸ்சில் ஏறுவதற்கு கையை நீட்டினால் பேருந்துகளை அங்கு நிறுத்துவதில்லை, இப்படி பெண்களை பல விதங்களிலும் அவமானப்படுத்துவதும் அவர்களை உதாசீனப் படுத்துவதும் எனஅரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெரும்பான்மையினர் செய்து வருகிறார்கள். அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தும் கூட அதன் மூலம் பெண்களுக்கு அது பயனில்லாமல் போகிறது. எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதுபோன்ற பஸ்களை இயக்கும் ஓட்டுனர் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இதே நிலை தொடருமானால் பெண்கள் போராட்டத்தில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் வயிற்று பிழைப்புக்காக குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கூலி வேலைக்குச் செல்வதற்காக, கடைகளுக்கும், தினசரி வேலைக்கு அன்றாடம் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள்களின் நிலை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.