சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில் 350 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து சீனாவில் இருந்து இந்தியா வந்த கேரள மாநிலதவர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருந்ததையடுத்து, அவரும் ஆழப்புலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது காசர்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டம் காங்கநாடு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் சீனாவின் வுஹான் நகரில் மருத்துவம் படித்து வருகிறார். இந்தியா வந்திருக்கும் அவருக்கு தற்போது கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவில் தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் தமிழகத்தில் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.