Skip to main content

திறப்பு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுடன் அமைச்சர் வீரமணி வாக்குவாதம்... பெண் இன்ஸ்பெக்டரை பிடித்துத் தள்ளிய அதிமுகவினர்!

Published on 19/12/2020 | Edited on 21/12/2020

 

 Minister Veeramani arguing with DMK MLA at the opening ceremony of the mini clinic ...

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது மதனாஞ்சேரி கிராமம். இங்கு, டிசம்பர் 19-ஆம் தேதி அரசு மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த அரசு விழா மேடையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று கலந்துகொள்ள மேடையேறினார். விழா மேடையில் இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோரிடம், என் தொகுதியில் நடைபெறும் விழாவில், மேடையில் உள்ள பதாகையில் அமைச்சர்கள் பெயர், கலெக்டர் பெயர் உள்ளது. எதற்காக தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய என்னுடைய பெயரை போடாமல் புறக்கணித்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, இது அரசு விழா அல்ல, மினி கிளினிக் குறித்து அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மேடை எனக்கூறி சட்டமன்ற உறுப்பினரையும் அவருடன் வந்த நிர்வாகிகளையும் கீழே இறங்குங்கள், இது அரசு விழா மேடை அல்ல, அதிமுக அரசியல் மேடை என அமைச்சர் கே சி வீரமணி கூறினார்.

 

 Minister Veeramani arguing with DMK MLA at the opening ceremony of the mini clinic ...

 

இதைக்கேட்டு அதிர்ந்து போன சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, கேட்டுக்கொள்ளுங்கள். இது அரசு விழா இல்லை என்றும் அரசியல் மேடை என்றும் அமைச்சர் கூறுகிறார். அதிமுக விழா மேடையில், எதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேடையில் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பி, விழாவைப் புறக்கணிப்பதாகக் கூறி தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூடி இருக்க, அரசு விழா மேடையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அரசு நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் வந்து கலந்துகொண்டவர், சட்டமன்ற உறுப்பினரிடம் இது அதிமுக நிகழ்ச்சி மேடையில் இறங்குங்கள் என ஒருமையில் மிரட்டியது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

 

மேடையில் அமைச்சருக்கும் - எம்.எல்.ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, அமைச்சருடன் வந்த அதிமுகவினர் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியை கீழே தள்ளிவிட்டு மேடையில் ஏறினர். இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக் கூட கேட்கவில்லை அதிமுகவினர்.

 

 Minister Veeramani arguing with DMK MLA at the opening ceremony of the mini clinic ...

 

இதேபோல் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் ஊராட்சிப் பகுதியில் அம்மா கிளினிக் திறப்பதற்காக அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மிட்டாளம் கிராமம் ஆம்பூர் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் வில்வநாதனின் சொந்த ஊராகும். அங்குதான் அவரது வீடும் உள்ளது. எம்.எல்.ஏ ஊரில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவரை முறைப்படி அழைக்கவில்லையாம்.

 

சொந்த ஊரில் நடைபெறும் விழாவில் நானும் கலந்துகொள்ளப் போகிறேன், மேடையேறுவேன் எனச் சொன்னவுடன் பரபரப்பாகி திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு, திமுகவினரும் அதிமுகவினரும் கட்சிக் கொடிகளை அரசு விழாவில் கட்டினர். இதனால் உடனடியாக ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் 3 டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் என 100 காவலர்கள் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த அமைச்சர் மினி கிளினிக்கை திறந்து வைத்துச் சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.