Minister Udhayanidhi who encouraged DMK senior leaders

ஈரோடு வடக்கு - தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகள், கொரோனா & விபத்துகளால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் - மாற்றுத்திறனாளிகள் என திமுகவைச் சேர்ந்த 2600 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தலா ரூ.10 ஆயிரம்,பொற்கிழி மற்றும் நிதியுதவியை வழங்கும் நிகழ்வு இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

Advertisment

பிறகு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றாலும், ஈரோடு மாவட்டத்திற்கு வரும்போது, பெரியாரின் பாசறைக்கு திரும்புவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஈரோடு மாவட்டத்திற்கு பலமுறை நான் வந்திருக்கிறேன். ஆனால், கட்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி அதை விட சிறப்பான நிகழ்ச்சியாகும்.

Advertisment

Minister Udhayanidhi who encouraged DMK senior leaders

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் எந்த நிகழ்ச்சிக்கு கட்சி நிர்வாகிகள் தேதி கேட்டாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளை கவுரவப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தினால் உங்கள் மாவட்டத்திற்கு வருவேன் என்று சொல்லி வருகிறேன். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.2600 பேருக்கு இந்த நிகழ்ச்சியில் பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் நடந்தபொற்கிழி வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், ‘உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள், இது ஒரு தந்தை மகனுக்கு சொல்லும் வாழ்த்து அல்ல. ஒரு தலைவர் தொண்டனுக்கு சொல்லும் வாழ்த்து’ என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மாட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறு எந்த இயக்கமும் செய்யாததை திமுக செய்துள்ளது. கட்சிக்காக உழைத்து ரத்தம் சிந்திய மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது சாதாரண நிகழ்வு அல்ல. ஒவ்வொரு தாத்தாவுக்கும் பேரனாக நான் செய்யும் கடமையாக கருதுகிறேன். உங்கள் ஆசிகளையும், வாழ்த்துகளையும் பெற வந்துள்ளேன். இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, அடுத்த மாதம் சேலத்தில் நடக்கிறது. அதற்கும் நீங்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல், வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. அதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு மூத்த முன்னோடிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த வெற்றி இந்தியாவிற்கான வெற்றி. பாசிச பாஜகவிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற, நீங்கள் அனைவரும் பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை விட திமுக துண்டினை தோளில் போடுவதைத்தான் நீங்கள் பெருமையாக கருதுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். கழகத்தின் வரலாறே நீங்கள் தான். நீங்கள் இல்லாவிட்டால் கலைஞர் இல்லை. திமுக இல்லை. இன்றைய முதல்வர் ஆட்சிக்கு வரவும் நீங்கள்தான் காரணம்.

நான் கலைஞர், பேராசிரியர் கூட்டங்களுக்கு போய் நேரில் பார்த்து, பேச்சை கேட்டிருக்கிறேன். ஆனால், பெரியார், அண்ணாவை நேரில் பார்த்ததில்லை. இங்கு இருக்கும் பலர், அவர்களை நேரில் பார்த்து, பிரச்சாரம் செய்து இருப்பீர்கள். எனவே, உங்களை பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரின் மறு உருவமாக கருதி வணக்குகிறேன்” என்று பேசினார்.