Minister Thangam Thennarasu admired Minister KKSSR Ramachandran

விருதுநகர் வடக்கு மாவட்டம் – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அந்தக் காலத்தில் எப்படி இருந்தார்? இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறார் என்று சிலாகித்துப் பேசினார்.

தங்கம் தென்னரசு உரையாற்றியபோது “விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றியை எத்தனையோ பேர் குறை சொல்கிறார்கள். இந்த வெற்றியானது, அச்சு அசலாகப் பத்தரை மாற்றுத் தங்கமாகப் பெற்ற வெற்றியாகும். நமது வருவாய்த்துறை அமைச்சரை நோக்கி சிலர் கணைகளை ஏவுகிறார்கள். இந்த வெற்றியைத் தட்டிப் பறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நாங்கள் எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் எப்படி இருந்தார் என்பதை அறிவோம்.

இன்றைக்கு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தன்னை முற்றிலும் ஒரு சைவப் பூனையாக மாற்றிவிட்டார். அவருடைய காலத்தில், எங்களைப் பொறுத்தமட்டில், அவர் இந்த அளவுக்கு மக்களோடு மக்களாக இணைந்து, இந்த நாட்டு மக்களுக்காக உழைப்பதிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, ஜனநாயகத்தைக் காக்கின்ற ஒரு அமைச்சராக, இந்தத் தேர்தல் களத்திலே நடமாடிக்கொண்டிருந்தார்.” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.