Minister Thangam Tennarasu says Pay electricity bill without penalty

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், புயல் மற்றும் மழையால் பாதிப்படைந்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 18 ஆம் தேதி கூடுதல் அவகாசம் செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “புயலால் பாதிப்படைந்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களது மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளார்.