/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srinivasan 1.jpg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சொத்து பிரச்சனை தொடர்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
. அதில், அமைச்சர் சீனிவாசன் கூறி இருப்பதாவது...... உசிலம்பட்டியில் உள்ள தா.பாண்டியனுக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தை நான் அபகரிக்க முயற்சித்ததாக என் மீது தா. பாண்டியன் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த பிரச்சனை தா. பாண்டியன் மற்றும் அவர் உடன் பிறந்த தம்பி டி எஸ். ராஜன் இருவருக்கும் உள்ள சொத்து பிரச்சனை ஆகும். டி.எஸ்.ராஜனின் மகன் ஜெபராஜன் என்னுடைய மருமகன் ஆவார். எனது மகளுக்கும் தா. பாண்டியன் உடன் பிறந்த தம்பி டிஎஸ் ராஜனின் மகன் ஜெபராஜுக்கும் 1995 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் திருமணம் நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tha pandian.jpg)
தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெபரானை எனது மருமகன் என்று குறிப்பிட்டுள்ளார். தவிர தனது தம்பி மகன் என்று குறிப்பிடவே இல்லை. தா. பாண்டியனுக்கும் அவரது தம்பி டிஎஸ் ராஜனுக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும் தா. பாண்டியன் தனது தம்பி டி எஸ் ராஜன் குடும்பத்தாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு தவறாக இத்தனையும் நான் ஏதோ இவரது சொத்தை அபகரிப்பது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.
தா. பாண்டியன் குறிப்பிடும் நிலத்தில் அவரது தம்பி டிஎஸ் ராஜனின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நான் எந்த ஒரு காலகட்டத்திலும் இந்த பிரச்சினைக்காக தலையிடவும் இல்லை. யாரிடமும் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படவில்லை. இது முழுக்க முழுக்க தா. பாண்டியனின் குடும்பத்தினர்களுக்கு இடையே உள்ள சொத்து பிரச்சனை. இது அவரும் அவரது தம்பி குடும்பத்தாரும் நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளட்டும்.
எனது மருமகனுக்கு தமிழ்நாட்டையே பட்டா போட்டு கொடுக்கட்டும் என்று தா. பாண்டியன் கூறியிருக்கிறார். மேற்கண்ட செய்திகளை மறைத்து தரம்தாழ்த்தி விமர்சனம் செய்வது அவரது வயதுக்கும் அரசியல்முதிர்ச்சிக்கும் அழகல்ல. என்னுடைய இத்தனை வருட அரசியல் வாழ்வில் நான் யார் சொத்துக்கும் ஆசைப் பட்டதுமில்லை அபகரித்ததும் இல்லை. இனிமேலும் எப்போதும் செய்யப் போவது மில்லை என்று தனது அறிக்கையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார் .
Follow Us