Skip to main content

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது இயக்கப்படும்? - அமைச்சர் சிவசங்கர் தகவல்

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Minister Sivashankar information on When will kilambakkam Bus Station be operational

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. சுமார் 397 கோடி ரூபாய் மதிப்பில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

ஒரே நாளில் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறை, மருத்துவ வசதி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு பயன்படும் வகையில் பேட்டரி கார்கள், 2 எஸ்கேலட்டர்க்ள், 6 லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளும் இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்துதான் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு வரவிரும்பும் பயணிகள் நேராக கோயம்பேடு வரமுடியாது. மாறாக கிளாம்பாக்கம் வந்த பின்னர் அங்கிருந்து மாநகர பேருந்தின் மூலம்தான் கோயம்பேடு வரமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தென்மாவட்டங்களுக்கு SETC பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் நாளை (31-12-23) முதல் முழுமையாக இயக்கப்படும். கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். கும்பகோணம், சேலம், கோவை, விழுப்புரம் கோட்டம் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். அதே போல், பெங்களூர், இசிஆர் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது” - அமைச்சர் சிவசங்கர்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Minister Sivasankar says Tamil Nadu Government Transport Corporations have been shortlisted for 17 awards

அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. 

இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும் எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் பணியாற்றியதின் பயனாக, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2022-23 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 17 விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. 

மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளது. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன்படி, பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காக (புறநகர் 1000 பேருந்துகளுக்குள்) (Fuel Efficiency Award) முதல் இடத்திற்காகவும், சாலை பாதுகாப்பிற்காகவும் (புறநகர் 1000 பேருந்திற்குள்) (Road Safety Award). உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award-Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award-Rural), பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Urban Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 6 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

பேருந்துகளில் எரிபொருள் திறனுக்காகவும் (நகர்புறம் 1000 பேருந்துகளுக்கு மேல்) (Fuel Efficiency Award), உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (கிராமப்புற பிரிவு) (Tyre Performance Award-Rural), பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Tyre Performance Award- Urban), வாகன பயன்பாட்டிற்காகவும் (நகர்ப்புற பிரிவு) )Vehicle Utilization Award-Urban) முதல் இடத்திற்கும், ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) இரண்டாம் இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

வாகன பயன்பாட்டிற்காகவும் (கிராமப்புற பிரிவு) (Vehicle Utilization Award- Rural) பணியாளர் செயல் திறனுக்காகவும் (நகர்ப்புற பிரிவு) (Employee Productivity Award-Rural) முதல் இடத்திற்கும், பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (நகர்ப்புற பிரிவு) (Digital Transaction Award-Rural) இரண்டாவது இடத்திற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது.

சாலை பாதுகாப்பிற்காக (நகர்ப்புறம் 1000-க்கும் குறைவான பேருந்துகள்) (Road Safety Award) முதல் இடத்திற்கும், சாலை பாதுகாப்பிற்காக (புறநகர் -1001 4000 பேருந்துகள்) (Road Safety Award) இரண்டாவது இடத்திற்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 2 விருதுகள் பெற்றிட தேர்வாகியுள்ளது. ASRTU தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக (ASRTU Rebate Award) முதல் இடத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் ஒரு விருது பெற்றிட தேர்வாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Omni Bus Owners Case Dismissed in Supreme Court

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.  இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான மனு கடந்த 9 ஆம் தேதி (09-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ‘போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Omni Bus Owners Case Dismissed in Supreme Court

அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாகக் குறிப்பிட வேண்டும். ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்   மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்” எனத் தெரிவித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.