Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Minister Senthil Balaji's bail plea Court order to enforcement department

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய நீதிமன்றம், அவருக்கான நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

 

அதனைத் தொடர்ந்து முதன்மை நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக நாடியது. அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் என அறிவுறுத்தியது. இதையடுத்து மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என முடிவெடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்தனர். அப்போது நீதிபதிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று (11.09.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என். ரமேஷ் கோரிக்கையை முன் வைத்தார். இதையடுத்து நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமைக்குள் (15.09.2023) பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்