Minister Senkottayan

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கொளப்பலூர், நம்பியூர், எலத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசின் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 640 ஏழை பெண்களுக்கு,கோழிக் குஞ்சுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று 29 ஆம்தேதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

"கோபியில் 24 மணி நேரம் செயல்படும் கால்நடை பாலிகிளீனிக் தொடங்கப்படுகிறது. கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் இன்னும் அதிகமானபேருக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். கோழிகளுக்கு வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் போடும் தடுப்பூசியை 2 நாட்களாக வழங்க நமது தமிழகமுதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அரசு பள்ளிகளில் ஒரு ரூபாய் கூட வசூல் செய்யப்படவில்லை. தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக செய்தியாளர்கள் ஆதாரமில்லாமல் சொன்னால்,நடவடிக்கை எடுக்க முடியாது. யாராவது ஒரு பெற்றோர் எழுத்து முலமாக புகார் கொடுத்தால் கூட அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மோளை ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை மற்றும் பாடப்புத்தங்கள் வழங்குவதற்காகவும், அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை வழங்கவும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் 1 ஆம் வகுப்பில் சேர்ந்து உள்ளனர். செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். கரோனோ காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களைச்சேர்க்க பெற்றோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் கோபியில் உள்ள கல்லூரி, அந்தியூர், தாளவாடியில் உள்ள பள்ளிகள், பெருந்துறையில் தனியார் திருமண மண்டபம் என கூடுதலாக கரோனோ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது." எனக் கூறியவரிடம் ஒரு செய்தியாளர் அண்ணன் எப்போது பார்த்தாலும் துறை பற்றி மட்டுமே பேசுகிறாரே..ஜூனியர் ஜெயக்குமார் எல்லாம் அரசியல் கேள்விக்கு பதில் விளாசுகிறார்.. ஒரே ஒரு கேள்விக்கு பதில்சொல்லுங்க "பா.ஜ.க. கூட்டணி..... " என தொடங்கும் போதே வேகமாக நடையைக் கட்டி காது கேட்காதது போல சென்று விட்டார் செங்கோட்டையன்,

பின்னால் வந்த ர.ர.க்கள் "அட போப்பா... அடிச்சுகூட கேட்பாங்க அப்போதும் வாய் திறக்க கூடாதுனு ஒருகாமெடி வசனம் வருமே, அப்படித்தான்..எதுவும் வராது என்றனர்.