Minister Sekharbabu speech If the lotus blooms, then there will be tension 

Advertisment

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பில், ரூ.12.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பசுமை பூங்காவைத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் (06.11.2024) நேரில் ஆய்வு செய்திருந்தார். அப்போது, அவர் அங்குள்ள ஏரியில் சில தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. இதனைக் கண்ட அமைச்சர் சேகர்பாபு, ‘தாமரை மலரக்கூடாது’ என அதிகாரிகளிடம் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டு தெலங்கானாவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள். அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள் தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.

நீங்கள் காலம் காலமாகக் கூவத்தைச் சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள். இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம். இலட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “தாமரை எங்காவது மலர்ந்தால்தானே டென்ஷன் ஆவதற்கு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூண்டோடு ஓரம்கட்டிவிட்டோம். பின் நாங்கள் ஏன் டென்ஸனாக வேண்டும்?. திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. நான்கு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த திமுக, தற்போது எட்டுக்கால் பாய்ச்சலில் பாயத் தயாராகிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.