Skip to main content

“திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா தமிழிலும் நடத்தப்படும்” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

Published on 18/06/2025 | Edited on 18/06/2025

 

Minister SekarBabu says Tiruchendur temple consecration ceremony will be conducted in Tamil

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி (07.07.2025) காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் திருச்செந்தூர் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தமிழிலே அர்ச்சனை செய்யப்படும் என்று பதாகை வைத்துஅர்ச்சனை செய்கின்ற அர்ச்சகருடைய பெயரையும் அவருடைய கைப்பேசி எண்ணையும் அறிவித்த ஆட்சிதான் எங்களுடைய ஆட்சி என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகன் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொள்கை. ஆகவே திருச்செந்தூரில் அருள்மிகு முருகப்பெருமானுடைய குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும்.

பழனி, மருதமலை கோவில்களில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது. யாரும் சொல்லித்தான் தமிழில் குட முழுக்கு நடக்க வேண்டும் என்று இல்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், “கோயில் நன்னீராட்டு விழாவின் போது 8000 சதுர அடி பரப்பில் 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக வேலிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வேலிச்சாலை, யாகசாலை வழிபாடுகள் நாட்களில் வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதஸ்வரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் காலை 7 மணி முதல் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 64 ஓதுவார் மூர்த்திகள் கொண்ட பக்க வாத்தியங்களுடன் 12 திருமுறை திருப்புகழ் மற்றும் கந்த அனுபூதி ஊதியம் முதல் செந்தமிழ் வேதங்கள் முன்னேற்றத்தால் நடைபெறும். இதன் மூலம் குடமுழுக்கு நிகழ்வின் முன்பாக நடைபெறும் கேள்விச்சாலை முழுவதும் தமிழில் நடைபெறும் என்ற வகையில் செந்தமிழ் வேதங்கள் அனைத்தும் 64 ஓதுவா மூர்த்திகள் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்