Skip to main content

“மத்திய நிதியமைச்சர் அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார்” - அமைச்சர் சேகர்பாபு

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Minister Sekar Babu's reply to Union Justice Minister Nirmala Sitharaman

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

இதனிடையே ராமர் கோவில் திறப்பு விழாவை நாட்டு மக்கள் கண்டுகளிக்கும் வகையில், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் எல்.இ.டி திரை மூலம் நேரலை செய்யப்பட்டது. இந்த நேரலை நிகழ்வுக்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது உரிய அனுமதி வாங்கவில்லை என்று கூறி காவல்துறையினர் எல்.இ.டி திரையை அகற்றினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக அரசு இந்து விரோத செயலை செய்து வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் அனைத்து திருக்கோவில்களிலும் சுதந்திரமாக வழிபாட்டு முறைகள் நடைபெறுகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் கண்ணோட்டத்தால் மட்டுமே இதனை அணுகுகிறார். நேற்று ஏரிக்காத்த ராமர் கோவிலுக்கு சென்ற நிர்மலா சீதாராமன், அங்கு 25 லட்சம் ரூபாயில் உபயதாரரின் சார்பில் பணிகள் நடைபெற்றிருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு இங்கு என்ன பணிகள் நடைபெறுகிறது என்று நிர்மலா சீதாராமன் கேட்க, அதற்கு உபயதாரரும், கோவில் நிர்வாகிகளும் பணிகள் குறித்து முழுவதும் விளக்கமாக கூறியுள்ளனர். அதனை கேட்டுவிட்டு கோவில் பணிகள் உபயதாரரின் மூலம் நடைபெறுகிறது என்றால் உண்டியலில் விழும் பணம் எங்கே எடுத்து செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

கோவிலில் உபயதாரர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு கோவிலுக்காக நேர்த்திக்கடன் செய்ய வருவார்கள். அப்படி வருபவர்களை வேண்டாம் என்று சொல்லவா முடியும். எந்த காலத்திலும் அதுபோன்று திருப்பணிகள் நடைபெற்றதே இல்லை. திருக்கோவில் பணிகள் குறித்து அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார் மத்திய அமைச்சர்.

இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ராம பஜனை நடப்பதற்கு தடை விதித்ததாக கூறினார்கள். அப்படி எந்த தடையும் தமிழக அரசு விதிக்கவில்லை. கோபாலபுரத்தில் கலைஞர் வீட்டுக்கு அருகே உள்ள ராமர் கோவிலில் கூட இன்று எல்.இ.டி திரை அமைத்து ராமர் கோவில் திறப்பு விழா நேரலை செய்யப்பட்டது. நாங்கள் எந்த வித தடையும் விதிக்கவில்லை. திருக்கோவில்களில் அன்னதானம், எல்.இ.டி திரை போடுவதற்கு நாங்கள் எப்போதும் தடை விதித்தே இல்லை. ஆனால் முறையாக அனுமதி வாங்கிவிட்டு அதனை செய்ய வேண்டும். ஆன்மீகத்தை ஆன்மீகமாக பார்க்கும்போது நாங்கள் எந்த வித தடையும் விதிக்கவில்லை; ஆன்மீகத்தை அரசியலாக்கும் போதுதான் சட்டத்திற்கு உட்பட்டு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.