முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்துர் பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோவில் கட்டிவருகிறார். அந்தப் பணிகளை ஆய்வு செய்யவந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலகெங்கும் வாழும் கோடிக் கணக்கான தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்துவருகிறார். எங்கள் குடும்பமும் அவரை குல தெய்வமாகத்தான் வழிப்படுகிறோம். 1.50 கோடி தொண்டர்களுக்கும் அவர் குல தெய்வமாக திகழ்கிறார். விரைவில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் உதயகுமார் கட்டும் இந்தக் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். இருவரது முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.