Skip to main content

“கலைஞர் மாதிரியே ஸ்டாலினும் ஆரம்பிச்சிட்டாரு..” -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ‘தாறுமாறு’ பேச்சு!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கையில் வீரவாள் தந்தனர். அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் என்றாலும்,  அமைச்சரின் பேச்சில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான தாக்குதலே கடுமையாக இருந்தது.  

கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு என்பது அறிஞர் அண்ணாவின் முக்கிய கொள்கை முழக்கமாகும்.  பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய இந்த அடிப்படை பண்புகளை அவர் வலியுறுத்தினார். அவரது பிறந்தநாள் விழாவில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆற்றிய உரை இது -

 

minister rajendra balaji speech in anna birthday function

 

“அண்ணாவின் குடும்பத்தைக் காப்பாற்றியவர் ஜெயலலிதா. அண்ணாவை உரிமை கொண்டாடுகிற கட்சி.. பேசுகின்ற தகுதி அதிமுகவுக்குத்தான் உண்டு.  இன்று ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவுக்குத் துளியும் கிடையாது. அந்த யோக்கியதையும் ஸ்டாலினுக்குக் கிடையாது. அண்ணாவைப் பற்றி அதிகம் விமர்சனம் பண்ணியவர்கள்.. காங்கிரஸைக் காட்டிலும் கலைஞர் கருணாநிதிதான் அதிகமாகப் பேசினார்; திட்டினார்.

அதிமுக தொண்டன் எப்படிப்பட்டவன் தெரியுமா? எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டான். எம்.எல்.ஏ. சீட் கேட்க மாட்டான். பிரசிடென்டுக்கு நிற்கமாட்டான். கவுன்சிலர் சீட் கேட்கமாட்டான். மந்திரி ஆகணும்னு கனவு காணமாட்டான். ஒண்ணுமே கேட்க மாட்டான். எலக்ஷன் வந்துட்டா கொடியைப் பிடிச்சிக்கிட்டு, ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்கிற கூட்டம் அதிமுகவுல இருக்கிறவரை இந்த இயக்கத்தை.. ஒன்றரை கோடி தொண்டர்கள் அதிமுகவுல இருக்கிறவரைக்கும் எவனும் அழிக்க முடியாது. காரணம் இது மனிதன் ஆரம்பித்த கட்சி இல்ல. புனிதர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. விழுவதுபோல் தெரியும். ஆனால்.. விழாது.  விழும்.. ஆனால்.. எழும்.

அதிமுகவை அழிப்பதற்கு கலைஞர் காலத்திலேயே 46 ஆண்டு காலமாக முயற்சி செய்து பார்த்தாரு. முடியவில்லை. இன்றைக்கு ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார். உங்க அய்யாவாலேயே முடியலியே தம்பி. நீ எங்களுக்கெல்லாம் கு....., உன்னால அதிமுகவை அழிக்க முடியுமா? அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இனிமே வரும் எலக்ஷன்ல அதிமுக பயங்கரமாக ஜெயிக்கப்போகுது. ஒண்ணு நாங்குநேரி. இன்னொண்ணு விக்கிரவாண்டி. ரெண்டுலயும் கடுமையா ஜெயிக்கப் போறோம்.

 

minister rajendra balaji speech in anna birthday function

 

ஓ.பி.எஸ்ஸுக்கும் எடப்பாடியாருக்கும் பிரச்சனை வரணும்னு ஆசைப்படறாங்க. எடப்பாடியார் எல்லாரையும் அனுசரிச்சி செல்லக்கூடிய ஒரு தலைவர். ஓ.பி.எஸ். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவர். இருவரும் இணைந்து இந்த இயக்கத்தை வழிநடத்துவதைப் பொறுக்க முடியாத ஸ்டாலின், இன்றைக்கு ஒப்பாரி வைக்கிறார். தலைவிரித்து ஆடுகிறார். இந்த ஆட்சி இருக்காதுன்னு சபாநாயகர்கிட்ட போறார்.  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம்கிறார்.  ஆட்சி அப்படியே மாறும்கிறார்.  ம.....  மாறும்யா. எங்கே மாறும்? நீ கொடுக்கிற சவுண்டைவிட நூறு மடங்கு சவுண்டு நாங்க கொடுப்போம். அதிமுக எம்.எல்.ஏ. 20 பேரை விலைக்கு வாங்கப் போறாங்களாம்.  உங்க கட்சியில இருக்கிற 60 எம்.எல்.ஏ.க்களை நாங்க வாங்கிருவோம். நாங்க வாங்கவே வேண்டாம். அவங்களே வந்திருவாங்க. ஸ்டாலினுக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சுன்னு அவங்க கட்சிக்காரங்களே சொல்லுறாங்க.

அந்த முதலமைச்சர் சீட்ல ஒரு நாளாச்சும் உட்கார்ந்துட்டு, மறுநாள் எந்திரிச்சி போயிடறனே. கொஞ்சம் எடப்பாடிகிட்ட சொல்லுங்களேன். இப்படி கேட்கிறாரு ஸ்டாலின்.  அவரு அய்யாவை மாதிரியே இவரும் ஆரம்பிச்சிட்டாரு. அமெரிக்காவிலிருந்து என்னுடைய நண்பர் எம்.ஜி.ஆர். வந்தவுடன் ஆட்சியைக் கொடுத்துவிடறேன். அதுவரைக்கும் ஆட்சியைக் கொடுன்னு கேட்டாருல்ல அவரு. அதேமாதிரி இவரும் ஆரம்பிச்சிட்டாரு. உனக்கு அந்த சீட் கிடையாது. எடப்பாடியார் அந்த சீட்ல பெர்மனென்டா உட்கார்ந்திட்டாரு. அரசியல் ரீதியா உங்க கதை முடிஞ்சு போச்சு. பிறக்கிறபோதே அதிமுக கொடியோடு பிறக்கக்கூடிய கட்சி அதிமுக. பெட்டிஷன் போட்டு பிழைக்கிற கூட்டம் திமுக கூட்டம். நாட்டுக்காக உழைக்கிற கூட்டம் அதிமுக கூட்டம். உள்ளாட்சி தேர்தலில் அனைத்தையும் கைப்பற்றுவோம்.” என்றார்.

‘அமைச்சர் வாயிலிருந்து அடுத்து என்ன கெட்ட வார்த்தை வரும்? கைதட்டலாம்; விசிலடிக்கலாம்..!’ என்ற எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காமல், மேடை நாகரிகம் குறித்து துளியும் கவலைப்படாமல், மனம்போன போக்கில் பேசுவது கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு வாடிக்கையாகிவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.