தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது.

Advertisment

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2014-ஆம் ஆண்டில் மகேந்திரன் என்பவர் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழக அமைச்சராக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய வருமானம் வரி வரம்பிற்குள் இல்லை எனவும், ரூ.18.88 லட்சத்திற்கு அசையும் சொத்தும், ரூ.19.11 லட்சத்திற்கு அசையா சொத்தும் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அமைச்சரான பின்னர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன் மீதான விசாரணை அதன் பிறகு நடைபெறவில்லை.

அதனால், மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், இன்று ராஜந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை எஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.