Skip to main content

“உதயநிதி வளர்ப்பு அப்படி!” -எடப்பாடிக்காக கே.டி.ராஜேந்திரபாலாஜி பாய்ச்சல்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

வேலூர் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட லத்தேரி, அரும்பாக்கம், ஓட்டூர் போன்ற கிராமங்களில் மழையில் குடை பிடித்தபடி அதிமுக வேட்பார் ஏ.சி.சண்முகத்துக்காக வாக்குசேகரித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வழக்கமான தனது பாணியிலேயே பிரச்சாரம் செய்தார்.  அவரது பேச்சில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மீதான தாக்குதலே அதிகமாக இருந்தது.

 

minister rajendar balaji election campaign


டெல்லியில் ராகுல்காந்தி பிரதமர், தமிழகத்தில் நான் பிரதமர் என்று கூறி பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. மாறாக அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மு.க. ஸ்டாலின் எதுவுமே கொடுக்காமல் குற்றம் சொல்லியே பெயர் வாங்கி வருகிறார். 

தமிழக முதல்வர் எடப்பாடியார் தெளிவாகக் கூறியுள்ளார். சிங்கம் குட்டி போட்டால் அது சிங்கக்குட்டி. வேறொன்று குட்டி போட்டால் அது வேற குட்டி. இது எடப்பாடியார் அவர்களை அவமரியாதையாகப் பேசும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பொருந்தும். ஏனென்றால் அவருடைய வளர்ப்பு அப்படி.  அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். எடப்பாடியாரை ஒருமையில் பேசுவதால் எடப்பாடியார் ஒன்றும் குறைந்து போகமாட்டார். உதயநிதியெல்லாம் அரசியல் பேசுகிற அளவிற்கு திமுக வந்துவிட்டது. 

நேரு, பொன்முடி போன்றவர்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையான மனச்சாட்சி உள்ளவர்கள் இன்றைய திமுகவில் இருக்க மாட்டார்கள். திமுகவில் மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல் நடக்கிறது. அண்ணா திமுகவில் வாரிசு அரசியல் என்பதற்கு இடம் கிடையாது. நான் சாதாரண ஒரு கூலித் தொழிலாளி. நான் பல்வேறு பதவிகளைக் கடந்து இன்று அமைச்சராக உள்ளேன். ஸ்டாலின் அவரது மகன் உதயநிதிக்காக உழைத்து வருகிறார். துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் வெற்றிக்காக ஓட்டு கேட்டு வருகிறார்.”என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.