Skip to main content

“குஜராத்தில் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது” - அமைச்சர் ரகுபதி விளாசல்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Minister Raghupathi answered modi and edappadi palaanisaamy speech

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரதமர் மோடி நேற்று (04.03.2024) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். இந்த பயணத்தின் படி சென்னை வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அதன் பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் ‘வணக்கம் சென்னை’ எனக் கூறி பிரதமர் மோடி பேசுகையில், “சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் தி.மு.க.வால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் குடும்பத்திற்கு முன்னுரிமை தருகின்றன. மோடிக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்திய நாட்டு மக்களை மனதில் வைத்து அரசியல் செய்கிறேன். இந்த நாடு தான் எனது குடும்பம். நாட்டு மக்கள் தான் எனது குடும்பம். நாட்டில் இருக்கும் ஏழைகளே எனது சொந்தங்கள். தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக நான் சொல்கிறேன். என் மனதில் உள்ள முக்கியமான கவலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. இந்த செயல் என் மனதை வலிக்கச் செய்கிறது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பா.ஜ.க.வை பலப்படுத்தினால் தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி தரும் உத்தரவாதம்” எனத் தெரிவித்திருந்தார்.

Minister Raghupathi answered modi and edappadi palaanisaamy speech

முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த வீடியோ பதிவில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப் போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசித் துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே, இந்த ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள். மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே, உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று (04.03.2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Minister Raghupathi answered modi and edappadi palaanisaamy speech

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக ஆளுநரின் அனுமதியோடு குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வை பொறுத்தவரையில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 16 பேரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று பா.ஜ.க. தனது கட்சியில் சேர்த்துள்ளது. நீண்ட கடற்கரை கொண்ட பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது நாடறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெறுகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்தியா முழுவதும் போதைப் பொருள் புழக்கம் உள்ள நிலையில் தமிழகம் மீது மட்டும் பழி சுமத்துவது எதற்கு? இதற்கு பெயர் மோடி பார்முலாவா என்று கேட்க விரும்புகிறோம்.

ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா, வடகிழக்கு மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. அரசு தமிழகம் மீது பழி போட வேண்டாம். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். குஜராத்தில் உள்ள துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதை எதிர்க்கிறோம்” எனப் பதிலடி கொடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.