வெள்ளம் சூழ்ந்த கிராமங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

The minister personally inspected the flooded villages

சிதம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், அணைக்கரை அருகே உள்ள கீழணையில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றல் திறந்து விடப்படுகிறது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறு நடுவே அமைந்துள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 தீவு கிராமங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்தக் கிராமத்தின் தெருக்களிலும் தண்ணீர் ஓடுவதால் ஏராளமானோர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டனர். திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி கிராமத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்த்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

பின்னர் கீழகுண்டலபாடி கிராமத்தில் தண்ணீர் ஓடும் பகுதிக்கு நடந்து சென்ற அமைச்சர் பொதுமக்களிடம் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் அதிகாரிகளிடம் தண்ணீர் சூழ்ந்த 3 கிராமங்களிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து உத்தரவு பிறப்பித்தார்.

Chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe