minister PA Pudukottai

Advertisment

தமிழக அமைச்சரின் உதவியாளர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் பெயர் சரவணன். திருபுவனம் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிபிஐயால் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டப்பட்ட 'குட்கா' வழக்கில் விசாரிக்கப்பட்டவர். இவரும் இன்னொரு பி.ஏவும் கடுமையான விசாரணைக்கு உள்ளானார்கள். இதன்பிறகு இப்பொழுது அந்த பி.ஏ காணாமல் போயிருக்கிறார்.

Advertisment

கடந்த சில வாரங்களாக டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருந்த இவர் முழுக்க தாடி வளர்த்து இருந்தார். அதன் பிறகு பொங்கலை முன்னிட்டு மொட்டை அடித்துக் கொண்டார். இப்படி வித்தியாசமாக காணப்பட்ட இவர், ''என்னை சிபிஐயை பிடித்துவிடுவார்கள், சிபிஐ பிடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்'' என்று சொல்லி வந்தார். இந்நிலையில் அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்கின்ற விவரமும் தெரியவில்லை.

அமைச்சர் தரப்பினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒருபக்கம் சிபிஐ அவரை கைது செய்துவிட்டதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் செய்தி பரப்பி வருகிறார்கள். இன்னொரு தரப்பு அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாகவும்செய்தி பரப்பி வருகிறது.

இவரைத் தேடி அமைச்சர் தனது ஆதரவாளர் படை ஒன்றை வைத்துள்ளார். செட்டியார் வகுப்பைச் சார்ந்த இவர் அமைச்சருக்கு பால்யகால நண்பர். அமைச்சருடைய அனைத்து நிழலுலக முதலீடுகள் அனைத்தும் இவருக்கு தெரியும். இவர் திடீரென மாயமாகி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ இவரை கைது செய்துள்ளதா என சிபிஐ வட்டாரங்களில் கேட்டபொழுது அவர்கள் மௌனம் காக்கிறார்கள். அவர் எங்கிருக்கிறார்? உயிரோடு இருக்கிறாரா? சிபிஐ பிடியில் இருக்கிறாரா என எதுவும் தெரியவில்லை. அவர் மட்டுமல்ல அவரது குடும்பத்தினரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.