Skip to main content

மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

minister muthusamy launched second phase students breakfast scheme in erode

 

ஈரோட்டில் பள்ளி குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக சிற்றண்டி வழங்கும் திட்டத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று துவக்கி வைத்தார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது இரண்டாம் கட்டமாக விடுபட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் என சேர்த்து 96 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 180 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இன்னும் மாவட்டத்தில் விடுபட்ட பள்ளிகள் மூன்றாவது கட்டத்தில் சேர்க்கப்படும் இந்த காலை சிற்றுண்டி வழங்குவதால் பள்ளிகளுக்கு வரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

 

மேலும் கல்வி வளர்ச்சிக்காக அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேரும் போது மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. செப்டம்பர் 15 முதல் ஒரு கோடி பெண்களுக்கு ஆயிரம் உரிமைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 அரசு பள்ளிகளை தனியார் தத்தெடுத்து மேம்படுத்த முன்வந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வடமுகம் வெள்ளோடு பகுதியில் நிலம் வழங்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் பிரிவை மாற்றம் செய்ய கலெக்டர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அங்கிருந்து உத்தரவு வந்ததும் சுமார் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு அவ்விடத்தில் பட்டா வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணன் உன்னி உட்பட பல உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.