nilopar

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பர் நிலோபர்கபில். இவரது மருமகன் காசீம். ஏப்ரல் 6ந்தேதி இரவு 7 மணியளவில் காசீம் தனது நண்பர்கள் இருவருடன் ஏலகிரி மலையில் இருந்து காரில் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் கீழே இறங்கி வந்துள்ளனர்.

Advertisment

ஏலகிரி மலையில் 8-வது வளைவில் இருதரப்பு வாகனங்கள் திரும்பும்போது அமைச்சர் மருமகனின் காரில் இருசக்கர வாகனம் ஒன்று உரசியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாகியுள்ளது. அமைச்சரின் மருமகனை இருசக்கர வாகன இளைஞர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதனால் அமைச்சரின் மருமகனுக்கு முகம், மூக்கு, வாயில் ரத்தம் வந்துள்ளது. அடித்துவிட்டு அந்த இளைஞர்கள் தங்களது பைக்கை எடுத்துக்கொண்டு சிட்டாக மலையை விட்டு கீழே இறங்கியுள்ளனர்.

Advertisment

அடிவாங்கிய அமைச்சரின் மருமகன், அவருடன் இருந்த இரண்டு பேர் வாணியம்பாடியில் உள்ள கட்சியினருக்கு தகவல் சொல்லி அவர்களை மடக்கச்சொல்லியுள்ளனர். வாணியம்பாடி நகருக்கு வெளியே தனியார் பொறியியல் கல்லூரி அருகே 3 இளைஞர்களை மடக்கிய அமைச்சரின் ஆட்கள் 20 பேர், அந்த இளைஞர்களை நன்றாக அடித்து உதைத்துள்ளனர். மருமகனை அடித்தது, அந்த இளைஞர்கள் சிக்கிய தகவல் அமைச்சர் நிலோபர்கபில் கவனத்துக்கு செல்ல கோபமான அவர் காவல்துறை அதிகாரிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் ஆட்களால் பிடிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் தற்போது ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் மீது ஏலகிரிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. சம்மந்தப்பட்ட இளைஞர்கள் 17 வயதானவர்கள் என்பதால் அதற்கு தகுந்தார்போல் வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் காவல்துறை உள்ளது. இதனால் கொதித்துப்போய்வுள்ளனர் சம்மந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள்.

Advertisment

அந்த இளைஞர்கள் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் எனக்கூறப்படுகிறது. அடிவாங்கியது, அடித்தது இரண்டும் ஒரே சமூகம் என்பதால் சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது. சம்மந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த சம்பவத்தில் கொதித்துப்போய்வுள்ளது. இந்த பிரச்சனையால் வாணியம்பாடி நகரம் பதட்டமாகவே உள்ளது.