Skip to main content

"தாய்ப்பாலில் விஷம் கலப்பதும் நீர்நிலைகளில் கழிவுகளைக் கலப்பதும் ஒன்றுதான்" - அமைச்சர் மெய்யநாதன்

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

minister meyyanathan talks about water resources issue in pudukottai district 

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கத்தை அடுத்து இளைஞர்கள் இணைந்து, "இழந்த நீர்நிலைகளைக் காப்போம்! மரங்களை மீட்போம்! இயற்கையை உருவாக்குவோம்!"  என்ற  நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய நீர்நிலை மீட்புப் பணி தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடங்கிய நீர்நிலை சீரமைப்பு பணி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. டெல்டா இளைஞர்களின் இந்தத் தீவிர நீர்நிலை மீட்புப் பணியைப் பார்த்து பல்வேறு நிறுவனங்களும், தன்னார்வ சேவை அமைப்புகளும் தானாக முன்வந்து இயந்திரங்கள் உள்பட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

 

இந்த வகையில்தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பூவற்றக்குடி கிராமத்தில் உள்ள ஆலங்குளம், நாச்சான்குளம், வருசாக்குளம் ஆகிய 450 ஏக்கர் பரப்பளவுள்ள 3 ஏரிகளை தூர்வாரும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது. ரூ.37.50 லட்சம் மதிப்புள்ள புதிய பொக்லைன் இயந்திரத்தைப் பொதுப் பணிகளுக்காக அமெரிக்க வாழ் தமிழர்களான நண்பன் பவுண்டேஷன், மதர்ஸ் பார் மதர் நேச்சர் சக்தி மற்றும் ப்ரீத்தி வழங்கியுள்ளனர். இவர்களுக்காக வேல்காந்த் நேரில் வந்து பொக்லைன் இயந்திரத்தை ஒப்படைத்தார். சித்தார்த் இயந்திர இயக்குநருக்கான செலவினங்களை ஏற்றுள்ளார். பவுன்ஸ் பேக் டெல்டா நிர்வாகிகள் சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். தொடக்க விழா, ஊராட்சி மன்றத் தலைவர் கோசலை காந்தி தலைமையில் 130க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டு சீரமைப்பு செய்ய உதவியாக இருந்த நிமல் ராகவன் முன்னிலையில் நடந்தது.

 

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, "இயற்கையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். தாய்ப்பாலில் விஷம் கலந்தால் என்ன தீமை ஏற்படுமோ அதேபோல் தான் நீர்நிலையில் கழிவுகளைக் கலப்பதால் தீங்கு ஏற்படும். அதனால் நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் உடனே உரிமம் ரத்து செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளைத் தூர் வாருவதுடன் நின்றுவிடாமல் குறுங்காடுகளையும் அமைத்து வருகிறார்கள். இது பாராட்டத்தக்கது. அந்த மரங்கள் உங்கள் பெயரைச் சொல்லும். அதே போல ஆலங்குடி தொகுதியில் சுமார் 200 குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பின் நாட்களில் யாராவது என்ன செய்தார் என்று கேட்டால் அந்த மரங்கள் பதில் சொல்லும் இயற்கையை வளர்த்தார் என்று. இப்போது பூவற்றக்குடியில் தூர்வாரப்பட உள்ள 3 ஏரிகளிலும் மழைக்காலத்தில் அரை டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இதே போல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க இந்த அமைப்புகள் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதற்காக அவர்களுக்கு நன்றிகளையும் சொல்கிறோம். தேவைப்பட்டால் நாங்களும் இணைந்து கொள்கிறோம்" என்றார்.

 

இவ்விழாவில் அறந்தாங்கி கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.

Next Story

“ஜாதிப் பெயரைவிட படிப்பின் பெயரை போட்டுக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Minister Meyyanathan says he is proud to say the name of the education rather than the caste

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்காக குழு அமைத்து கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி வகுப்பறைகளை சீரமைத்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அந்தப் பள்ளியின்  செயல்பாடுகளைப் பாராட்டியதோடு முன்னாள் மாணவர்கள் அந்தப் பள்ளி வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் அதிகம் உள்ளனர். அதேபோல கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதமும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடும் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் மேம்பாடு அடையும்போது அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். எந்த ஒரு சூழலிலும் கல்வியை கற்றால் எதையும் சாதிக்கலாம்.

ad

ஒரு காலத்தில் தமிழகத்தில் நாம் பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் பயன்படுத்தினோம். இப்போது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் நீக்கப்பட்டு படித்த படிப்பின் பட்டங்களை பயன்படுத்துகிறோம். இந்த மாற்றத்திற்கு நாம் கற்ற கல்வி தான் காரணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். அதனால் அதிகமானோர் கல்வி கற்க காரணம். எப்போதும் அப்படிப்பட்ட கல்வியை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் சூழலில் மெய்யநாதன் என்ற பெயருக்கு பின்னால் இடம் பெற்றுள்ள MCA என்ற படித்த பட்டம் தான் உலக அளவில் எனக்கு பெயரையும், மதிப்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது. அதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் மாணவர்களும் கல்வி கற்பதில் அதிக ஆர்வமுடன் செயல்பட்டு பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பட்டங்களை போடுவதை பெருமையாக கருத வேண்டும்” என்றார்.