Skip to main content

“மனு கொடுத்த மக்கள், உத்தரவு போட்ட அமைச்சர்...” - ஒரே நாளில் மாறிய கிராமம்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Minister Meyyanathan fulfilled the demand of kuzhamangalam village people

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள குளமங்கலம் என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குளமங்கலம் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சரியான சாலை வசதியில்லாத காரணத்தால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத சூழல் இருந்தது. இதனால், இந்தக் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

 

இந்நிலையில், தங்களுடைய கிராமத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்துத் தர வேண்டும் என்று ஊர்மக்கள் ஒன்று கூடி அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், அருகில் இருந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனிடம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.

 

அதன்பிறகு, கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கிராமப் பதிவேடுகளைக் கொண்டுவரச் செய்து ஆய்வு செய்த போது, சம்பந்தப்பட்ட பகுதிக்கு நிலவழிப்பாதை இருப்பதாக வருவாய் கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த வரைபடத்துடன் சர்வேயர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற கோட்டாட்சியர் முருகேசன், அந்தப் பகுதியில் நிலம் வைத்துள்ள பட்டாதாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது, பல வருடங்களாக நில உரிமையாளர்களாக இருந்த விவசாயிகள், சாலை அமைப்பதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒன்றாக சேர்ந்து சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில்,  5 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சாலை அமைக்கும் பணி அன்று மாலை வரை நடந்தது. மேலும், அமைச்சரின் உத்தரவின் பேரில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த கோட்டாட்சியர் முருகேசன், கடைசி வரை அங்கேயே இருந்துள்ளார். முதல் நாளில் தொடங்கிய பணிகள் இரண்டாம் நாள் மாலை வரை நீடித்த நிலையில், முழுமையாக சாலை பணிகள் முடிந்த பிறகுதான் அவர் அங்கிருந்து சென்றார். இதனால், நெகிழ்ந்து போன கிராம மக்கள் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்கள்.

 

பல வருடங்களாக பாதை இல்லாமல் தவித்த மக்களுக்கு, ஒரே நாளில் தீர்வு கண்ட அமைச்சர் மெய்யநாதனுக்கும், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் தங்களின் பாரட்டுகளைத் தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.