Skip to main content

“மனு கொடுத்த மக்கள், உத்தரவு போட்ட அமைச்சர்...” - ஒரே நாளில் மாறிய கிராமம்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Minister Meyyanathan fulfilled the demand of kuzhamangalam village people

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள குளமங்கலம் என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குளமங்கலம் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சரியான சாலை வசதியில்லாத காரணத்தால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத சூழல் இருந்தது. இதனால், இந்தக் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

 

இந்நிலையில், தங்களுடைய கிராமத்திற்கு நிரந்தரமாக சாலை அமைத்துத் தர வேண்டும் என்று ஊர்மக்கள் ஒன்று கூடி அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், அருகில் இருந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனிடம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டார்.

 

அதன்பிறகு, கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கிராமப் பதிவேடுகளைக் கொண்டுவரச் செய்து ஆய்வு செய்த போது, சம்பந்தப்பட்ட பகுதிக்கு நிலவழிப்பாதை இருப்பதாக வருவாய் கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த வரைபடத்துடன் சர்வேயர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற கோட்டாட்சியர் முருகேசன், அந்தப் பகுதியில் நிலம் வைத்துள்ள பட்டாதாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது, பல வருடங்களாக நில உரிமையாளர்களாக இருந்த விவசாயிகள், சாலை அமைப்பதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒன்றாக சேர்ந்து சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில்,  5 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சாலை அமைக்கும் பணி அன்று மாலை வரை நடந்தது. மேலும், அமைச்சரின் உத்தரவின் பேரில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த கோட்டாட்சியர் முருகேசன், கடைசி வரை அங்கேயே இருந்துள்ளார். முதல் நாளில் தொடங்கிய பணிகள் இரண்டாம் நாள் மாலை வரை நீடித்த நிலையில், முழுமையாக சாலை பணிகள் முடிந்த பிறகுதான் அவர் அங்கிருந்து சென்றார். இதனால், நெகிழ்ந்து போன கிராம மக்கள் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்கள்.

 

பல வருடங்களாக பாதை இல்லாமல் தவித்த மக்களுக்கு, ஒரே நாளில் தீர்வு கண்ட அமைச்சர் மெய்யநாதனுக்கும், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் தங்களின் பாரட்டுகளைத் தெரிவித்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.