Skip to main content

மலைவாழ் மக்களுக்கு 4 கி.மீ. நடந்து சென்று மருந்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Minister Ma.Subramaniyam provided medical kit to villagers near namakkal

 

நாமக்கல் அருகே, போதமலையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், அமைச்சர் மா.சுப்ரமணியன் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று, மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நடந்தது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நாமக்கல் வந்திருந்தார். அவருடன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மேல்சபை எம்.பி., ராஜேஷ்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அலுவலர்கள், ஆயில்பட்டி வழியாக ஜம்பூத்துமலைக்கு வந்தனர். 


அங்கிருந்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதமலைக்கு உட்பட்ட கெடமலை வரை அவர்கள் நடந்தே சென்றனர். அமைச்சர் மா.சுப்ரமணியன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். 


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; “தமிழக முதல்வர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் உள்ள மலைக்கிராமங்கள் மட்டுமின்றி, அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவ சிகிச்சை என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். 


ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத இரண்டு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் 1021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள், மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். 


நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது 9 கோடி ரூபாயில் பிரதான குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இக்கல்லூரி, 100 மாணவர்கள் சேர்க்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுமையாக செயல்படும். 


இந்த மாவட்டத்தில் நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. ராசிபுரம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக 23.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.