
17 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதி. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், காவல்துறையை அறிவுறுத்தலையும் மீறி இந்த பேரணி நடத்தத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருவர் ஆணையம் அமைத்துள்ளதாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய பெங்களூர் மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த், உள்பட 5 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்சிபி அணி நிர்வாகம், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.சி.பி. அணி நிர்வாகிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், “விளையாட்டு நிகழ்ச்சி, கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடுவதை நாகரிகமான சமூகத்தின் அடையாளமாக என்னால் பார்க்க முடியாது” என்று பேசியிருந்தார். இது பேசுபொருளாக மாறியது. முன்னாள் தமிழக பாஜக தலைவரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “கர்நாடகாவில் விளையாட்டு வீரர்களை பார்க்க கூட்டம் கூடி 11 பேர் மரணமடைந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'விளையாட்டு நிகழ்ச்சி, கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடுவதை நாகரிகமான சமூகத்தின் அடையாளமாக என்னால் பார்க்க முடியாது' என்ற எனது கருத்தை பதிவு செய்திருந்தேன். இது மதம் சார்ந்த பதிவு அல்ல; யாரையும் குற்றப்படுத்தும் பதிவும் அல்ல.
NCRB தரவுகளில் 3000-ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் கூட்ட நெரிசலில் பலியாகியுள்ளனர் என்ற செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இவற்றை தவிர்க்க வேண்டிய கடமை ஒரு நாகரிக சமூகத்திற்கு இல்லையா ?என்பதுதான் என் கேள்வியே தவிர வேறு எதுவும் இல்லை. பத்திரிக்கை நண்பர்கள் இதில் தங்களுக்கும் கடமை உள்ளது என்பதை உணரவேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன். இதை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கும் பேதைகளை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது” என்றார்.