Skip to main content

திருச்சி இளைஞர் மரணத்திற்கு காரணம் என்ன? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

 

Minister Ma. Subramaniyan statement about trichy youth
கோப்புப் படம் 

 

திருச்சி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரான திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய உதயகுமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உதயகுமாருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று பாதிப்பு உறுதி செய்து முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார். இளைஞரின் இறப்பை தொடர்ந்து வெளியான பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

 

இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திருச்சியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர், பெங்களூரில் வசித்து வந்தார். அவர் சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

எச்.3 என்.2 பாதிப்பால் இந்தியாவில் இரு மரணங்கள் நடந்துள்ளன. ஆனால், இவர் கொரோனா பாதிப்பினால் இறந்தாரா அல்லது எச்.3 என்.2 பாதிப்பினால் இறந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யவில்லை. அவரது மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் முடிவிலேயே அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.” என்று தெரிவித்தார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !