அமைச்சர் மா. சுப்பிரமணியன் அமெரிக்கா பயணம்!

 Minister Ma. Subramanian trip to America

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகள் சார்பில் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது உலக வங்கியில் கடனுதவி பெறுவது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவத் திட்டங்களுக்கு ரூ. 3000 கோடியில் மதிப்பீடு தயார் செய்துள்ளோம். எனவே இதற்காக ரூ.3,000 கோடி கடனுதவி பெற நாளை (01.07.2024) இரவு அமெரிக்கா செல்கிறேன். தமிழகத்தில் மருத்துவத் துறை திட்டங்களைச் செயல்படுத்த உலக வங்கியில் ரூ.3,000 கோடி கடனுதவி கேட்க உள்ளேன். அதோடு ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாகப் பேச உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe