Skip to main content

ஈரோட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’திட்டத்தைத் துவங்கி வைத்த அமைச்சர்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Minister launches 'Makkalai thedi Maruthuvam' project in Erode

 

ஈரோட்டில் பெரியசேமூர் தென்றல் நகரில் 24ந் தேதி மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மருத்துவ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மருத்துவத்துறையின்  சார்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு இருந்தாலும் பொதுமக்களுக்குக் குறிப்பாக நோயாளிகளாக இருக்கக்கூடியவர்கள் பயன்படுகிற வகையிலே அவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

 

அனேகமாக இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதிய திட்டம் இது. இதையெல்லாம் இன்றைக்கு அல்ல முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே பத்து வருட காலமாகத்  திட்டமிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு இடத்திலும் அதற்கான வாகனத்தை ஏற்பாடு செய்து ஒவ்வொரு வாகனத்தையும் இரண்டுபேர் மூன்று பேர் சென்று வீடு வீடாக அவருக்கு யார் யாருக்கு மருந்து கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் போய் மருந்து கொடுப்பார்கள் இடையிலே அவர்கள் ஒரு மாதம் சென்ற பிறகு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து அவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொண்டு மருந்துகளைப் பெற வேண்டும். ஒருவேளை பரிசோதனை அவசியம் இல்லை என்று சொன்னால்  நம்முடைய செவிலியர்களை நேரடியாக நோயாளிகள் வீட்டிற்குச் சென்று அந்த மருந்தைக் கொடுத்துவிட்டு வருவார்கள்.

 

ஒரு நோய்க்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் சிரமத்தின் காரணமாக, சங்கடங்களையும் வேறு விதமான நோய்களையும் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. அதை எல்லாம் முழுமையாக இப்பொழுது தடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல் வாழ்வைக் கொடுக்கிற திட்டமாக அமைகிறது. ஈரோடு மாநகரில் மட்டும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 530 மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5277 பேர் பல்வேறு இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 182 பேர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1521 பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 பேர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள். மக்கள் தேடி மருத்துவத் திட்டம் மூலம் இந்த நபர்கள் முழுமையாகப் பயனடைவார்கள்” என்றார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.