Skip to main content

“சக்கரபாணி போல் எல்லா எம்.எல்.ஏவும் இருந்துட்டா திமுக ஆட்சியை அசைக்க முடியாது”  - அமைச்சர் கே.என். நேரு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

minister kn nehru talk about  Sakkarapani

 

சக்கரபாணி போல் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்துட்டா... திமுக ஆட்சியை அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். இதில் திண்டுக்கல் மாநகராட்சி, பேரூராட்சி  மற்றும் ஊராட்சிகளுக்கு 132 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள். அதன்பின் ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் உள்ள கொல்லம்பட்டியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, இரண்டு பேரூராட்சி மற்றும் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கக்கூடிய 1422 ஊரக குடியிருப்புகளுக்காக 1368 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 3.90 கோடி மதிப்பீட்டில் டில்கசடு கழிவு ஆலைக்கும் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.

 

இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, எஸ்.பி. பாஸ்கரன், நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “ஒட்டன்சத்திரம் தொகுதிக்காக புதிய காவிரி குடிநீர் திட்டத்திற்கு 17 ஏக்கர் இடம் இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். எனவே அதை யோசனை செய்வோம் என்று அமைச்சர் சக்கரபாணியிடம் கூறியிருந்தேன். அடுத்த நாளே சொந்த செலவில் அரவக்குறிச்சி அருகே 17 ஏக்கர் நிலத்தை  தனது சொந்த பணத்தில் வாங்கி அதை பதிவு செய்து துறை செயலாளரிடம் ஒப்படைத்துவிட்டார். அதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உரக் கிடங்கு அமைக்க வேண்டும் எனில் 20 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு என்று கூறியபோது, அதையும் உடனே காப்பிலியப்பட்டி அருகில் தனது சொந்த செலவில் 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு வாங்கி கொடுத்து இருக்கிறார்.

 

இப்படி இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு எங்கள் உயரதிகாரிகளே ஆச்சரியப்பட்டு அசந்து போனார்கள். அதனால்தான் தொகுதி மக்கள் மனதில் தொடர்ந்து ஆறு முறையும் இடம் பிடித்தார். இனி ஏழாவது முறையும் அவர்தான். ஆனால் சக்கரபாணி அமைச்சராக இருந்தாலும் கூட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனை கொண்டு வந்து ரோடு போட்டுவிட்டார். அதுபோல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இருந்தபோது எல்லாத்துக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றால் இவர் நாளு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வந்துவிட்டார். நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும்போது எல்லாருக்கும் இரண்டு கட்டடம் கொடுத்தால் இவருக்கு மட்டும் 20 கட்டடம். அதுபோல் நான் ஒரு மாதம்தான் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தேன். அக்மார்க் சோழன் ஆராய்ச்சி நிலையத்தையும் கொண்டு வந்துவிட்டார்.

 

அந்த அளவுக்கு தொகுதி மேல் பற்றும் பாசமும் வைத்திருக்கிறார். அதுபோல் நமது உணவு அமைச்சர் எல்லா பக்கமும் வந்து போனாலும் கூட ஒட்டன்சத்திரம் தொகுதியை கவனிக்கிற மாதிரி எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்துட்டா... திமுக ஆட்சியை அசைக்க முடியாது. அந்த அளவுக்கு பணியாற்றுகிறீர்கள். நாங்கள் உங்களைப் பார்த்து கத்துக்குறோம். எப்படி ஐ.பி. திண்டுக்கல்லை பார்த்து வளர்க்கிறாரோ, அதேபோல் சக்கரபாணியும் பார்க்கிறார். அந்த அளவுக்கு திருச்சியையும் உங்களுக்கு இணையாக கொண்டு வருவோம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.