Skip to main content

'தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கலாம்'!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

minister kamaraj statement paddy formers district collectors

 

தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி, தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் பருவமான 2019- 2020ல், 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 205 கோடி சேர்த்து மொத்தம் ரூபாய் 6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5,85,241 விவசாயப் பெருமக்கள் பயனடைந்துள்ளனர். இந்த கொள்முதல் அளவானது தமிழ்நாடு வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.

 

தற்போது 01/10/2020 அன்று துவங்கியுள்ள 2020- 2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூபாய் 1,888 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூபாய் 1,868 ஆக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இத்துடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூபாய் 70 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூபாய் 50 வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூபாய் 1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூபாய் 1,918 வழங்கப்படும்.

 

மேற்கண்டவாறு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு இயந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொள்முதல் பணி 01/10/2020 முதல் துவங்கப்பட்டுள்ளது. 02/10/2020 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாகும். எனவே இன்று (03/10/2020) அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாகக் கொள்முதல் செய்யும் பொருட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்றும் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்கள் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளன.

 

தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை இயந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலிதீன் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாலும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்." இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.