புரிந்து செயல்பட்டால் நடிகர் விஜய்சேதுபதி எதிர்காலத்துக்கு நல்லது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, "தமிழகத்தில் தியேட்டர்களைத் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும். மக்களின் உணர்வுகளை நடிகர் விஜய்சேதுபதி மதிக்க வேண்டும். '800' திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வைப் புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பது பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய்சேதுபதி உள்ளார். திரைப்படத்துறையைப் பொறுத்தவரை தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது" என்றார்.