
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தம்பட்டியில் அமைந்துள்ள சித்தி விநாயகர், காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (04.06.2025) காலை மங்களவாத்தியம் முழங்க விகனேஷ்வர பூஜை ஆரம்பமானது. அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியளவில் சின்னாளபட்டி பிரிவில் உள்ள அழகர் தோப்பில் இருந்து புனித தீர்த்தங்கள், முளைப்பாரி அழைத்து வருதல், மண்டல பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் மந்திர புஷ்பம், திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சித்தி விநாயகர் கோவிலில் உள்ள கோபுர கலசத்திற்குச் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் நேற்று 11மணியளவில் காளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்குப் புனித நீர்; ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம், தீப ஆராதனை முடிந்தவுடன் தீர்த்தம் தெளித்தல், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமிக்குக் கோவில் கமிட்டியா்ர்கள் மற்றும் ஒக்கலிகர் காப்பு இளைஞர் மகாஜன சங்கத்தினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அமைச்சர் ஐ. பெரியசாமி ஊர் முக்கிய நிர்வாகிகளிடம் பேசும் போது, “கோவில் மட்டுமின்றி இந்த ஊராட்சிக்குத் தேவையான அனைத்து நலத் திட்ட உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன் அதை மனுவாக எழுதிக் கொடுத்தால் அதை உடனடியாக நிறைவேற்றித் தருகிறேன்” என்று கூறினார்.