
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி போடிக்காமன்வாடி ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக வத்தலகுண்டில் இருந்தும் திண்டுக்கல்லில் இருந்தும் மூன்று வழித்தடங்களில் போடிக்காமன்வாடி, வீரசிக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம் ஆகிய கிராமப்பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின்பு தங்கள் கிராமங்களுக்கு வந்த அரசு பேருந்துகளை பொதுமக்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி சசிகுமார் பங்கேற்று கிராம பொதுமக்கள் சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கிராமத்திலிருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் விடியல் பேருந்து பயணத்தை பயன்படுத்திடவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் ஏதுவாக பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.