Skip to main content

"மக்களுக்கு நல்லது செய்யணும்னா இங்க இருங்க...இல்லைன்னா வேண்டாம்..." - ஆவேசப்பட்ட அமைச்சர்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

minister i periyasamy angry govt officer

 

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியார் சத்திரத்தில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் எம்.பி ப.வேலுச்சாமி, ஒன்றிய பெருந்தலைவர் சிவகுரு சாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் நவநீதிகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார்.     

 

இந்த விழாவில் முகாம் அலுவலகத்தைத் திறந்து வைத்து விட்டு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பெரியசாமி, “கிராமப்புறங்களின் வளர்ச்சி நகரத்துடன் அது இணைந்து செய்யும் தொழிலைப் பொறுத்து அமைகிறது. குறிப்பாக வேலைக்குச் செல்வோர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவதற்கு நகரப் பேருந்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதுபோல் காலை, மாலை இரு வேளைகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் நகரங்களுக்குச் சென்று படித்துவிட்டு வர நகரப் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பத்து வருடங்களாக ஆத்தூர் தொகுதியில் எந்த ஒரு கிராமத்திற்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கவில்லை. கடந்த ஒரு வருடமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதியும் உள்ளது. கலைஞர் ஆட்சியின்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும், போக்குவரத்துத்துறை நஷ்டம் ஏற்பட்டபோதும் கிராமங்களுக்குச் சென்று வந்த நகரப் பேருந்துகளை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. காரணம் கிராமங்களின் வளர்ச்சியில்தான் நாடு உள்ளது என்பதை உணர்ந்தவர் கலைஞர். அவர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ஒரு படி மேலே போய் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற திட்டத்தையும் அறிவித்துவிட்டு நூறு சதவிகிதம் செயல்படுத்தி இருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்” என்று கூறினார். 

 

அதன்பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றபோது பலர் தங்களுடைய கிராமங்களுக்குச் சாலை வசதி இல்லை எனக் கூறி மனு கொடுத்தனர். மேலும் சிலர் மேல்நிலை தண்ணீர் தொட்டி, புதிய குடிதண்ணீர் குழாய் இணைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு கொடுத்தனர். பொதுமக்களில் ஒரு சிலர், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கிராமங்களுக்கு வருவதில்லை. எந்த ஒரு மனு கொடுத்தாலும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியவுடன் ஒன்றிய பொறியாளர் தேக்கராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதாவை அழைத்து பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இங்கு வேலை பாருங்கள். இல்லையென்றால் வேறு ஒன்றியத்திற்குச் சென்று விடுங்கள் என்று கூறியதோடு, ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை உடனடியாக தனது பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.