புதுக்கோட்டையில் இரவு 9 மணிக்கு பிறகு திடீரென 9.30 மணிக்கு ரோஜா இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்ற தகவல் சொல்லப்பட்டது.
அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்களும் அவசர சந்திப்பு என்று குவிந்தனர். அனைவரும் வந்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு தொடங்கியது..
ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழக முதலமைச்சரின் தொடர் முயற்சியால் வரலாற்று சாதனையாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. அதற்காக பிரதமர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். புதிதாக தொடங்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் மருத்துவக்கல்லூரி தொடங்க உள்ளது.
இதில் முதல்கட்டமாக தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டுடன் மத்திய அரசின் முதல்கட்ட நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. 12 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்க வேண்டும் அதன் பிறகு மத்தியக் குழு ஆய்வுகள் செய்த பிறகு தலா ஒரு கல்லூரிக்கு 150 இடங்களை கேட்டுப் பெறுவோம். ஜெ.வின் கனவான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.
தொடர்ந்து கொரானா வைரஸ் பற்றியும் கடந்த ஆண்டு மதுரையில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது சப்ஜெக்ட்டையே மாத்திடுவீங்க என்று சொல்லிக் கொண்டு பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.