Skip to main content

இனி ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பிழை திருத்தம் செய்யலாம் ! எப்போது என அமைச்சர் அறிவிப்பு ! 

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
க

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள், தொழிலாளர்கள் வரை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், குழுபோட்டிகளில் வெற்றி பெற்ற மண்டல வாரியான அணிகளுக்கு கோப்பைகள், கேடயங்கள் மற்றும் சான்றிழ்களையும் வழங்கினார். 

 

விழா முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், 

’’தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு துல்லியமான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிகிறது. இந்தியாவிலேயே கணினி முறையில் பொதுவினியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரே மாநிலம் தமிழகம் தான். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்திற்காக ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அவர் காட்டிய வழியில் இன்று வரை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தரமான அத்தியாவசிய பொருட்களை இந்த அரசு வழங்கி வருகிறது. ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை மேட்டுப்பகுதியில் உள்ள கிட்டங்கிகளுக்கு மாற்றம் செய்து வருகிறோம். 

 

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் பொதுவினியோகத்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருத்தங்கள் தொடர்பாக இதுவரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 7 லட்சத்து 26 ஆயிரத்து 112 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது’ என்றார்.

 

சார்ந்த செய்திகள்