Skip to main content

போராட்டத்தை அறிவித்த அதிமுக..! களத்திற்குச் சென்ற அமைச்சர் துரைமுருகன்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

Minister Duraimurugan who went to the Mullai Periyar Dam for inspection

 

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக முல்லை பெரியார் அணை உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில், 1979ஆம் ஆண்டு கேரள அரசு 136 அடியாக நீர் தேக்க அளவைக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, பல்வேறு நிபுணர்கள் குழு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்து கடந்த 2014ஆம் ஆண்டு 142 அடி வரை தண்ணீரை தேக்க அனுமதி அளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது. மேலும், அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்கு உதவ ஒரு துணை குழுவும் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கடந்த 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142 வரை தேக்கப்பட்டது.

 

தற்போது, கேரளாவிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்துவருவதால் இந்த ஆண்டு மீண்டும் 142 அடி வரை தேக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கேரள அரசு தொடர்ந்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று (04.11.2021) தீர்ப்பளித்த நீதிமன்றம், தொடர் மழை பெய்துவருவதால் நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை 139.50 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றும், அதற்குப் பிறகு 142 அடியாக ஏற்றிக்கொள்வதில் தடையில்லை எனவும் உத்தரவிட்டது. 

 

Minister Duraimurugan who went to the Mullai Periyar Dam for inspection

 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்ததை மீறி முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், இடுக்கி மாவட்ட கலெக்டர் சிபா ஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாலூர் சசோமன் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்று அணையின் பகுதிகளைப் பார்வையிட்டு கேரள போலீசாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்பிறகு கேரள மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி காலை 7 மணி அளவில் அணைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அம்மாநில அதிகாரிகள் பெரியாறு அணையில் 3 மற்றும் 4வது மதகைத் திறந்து தண்ணீரை உபரியாக வெளியேற்றினர். மொத்தம் உள்ள 13 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 34 கன அடி நீர் திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் 139.50 அடி வரை தேக்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டு, 29ஆம் தேதி காலை 138.70 அடியை எட்டியிருந்தபோதே தண்ணீர் திறக்கப்பட்டது கண்டு தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

அதனால், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக, ‘முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், சில காரணங்களால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும், அணை பலவீனமாக இருக்கிறது, உடைய வாய்ப்பிருக்கிறது போன்ற அவதூறுகளைக் கேரளாவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கி வைக்காமல் உள்ளது. இந்நிலையில், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக வரும் 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்திருந்தது.  

 

Minister Duraimurugan who went to the Mullai Periyar Dam for inspection

 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்று பரப்பப்பட்டுவருகிறது என்று விளக்கம் அளித்திருந்தார். அதேபோல், இன்று (5ஆம் தேதி) முல்லை பெரியாறு அணையை ஆய்வுசெய்ய இருப்பதாகவும் முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் இன்று காலை முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் படகில் சென்று அணையின் மதகு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய இருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்