Advertisment

பிரதமர் மோடியால் தமிழகம் பெருமைப்பட்டிருக்கிறது; அமைச்சர் சீனிவாசன் பகீர் பேச்சு

தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை மோடி அறிவித்ததின் மூலம் தமிழகம் பெருமைப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நடிகர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஜெ பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு சேலை வேஷ்டிகளையும் பொங்கல் பானை உள்பட பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

admk

இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ.... பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி கூட்டணி அமைத்ததை கண்டு ஸ்டாலினும், வைகோவும் வயிற்றெரிச்சல்பட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாமக கூட்டணி வைத்ததை கண்டு டாக்டர் ராமதாஸ் இது மணமக்கள் கூட்டணி என்றும் பாசத்துக்காக சேர்ந்த கூட்டணி என்றும் கூறினார். ஆனால் ஸ்டாலினோ இந்த கூட்டணி பணத்திற்காக சேர்ந்த கூட்டணி என்று கூறுகிறார். அப்படி பணத்திற்காக பாமக கூட்டணி சேர்ந்து இருக்கிறது என்றால் திமுகவில் பணம் இல்லையா? பணம் கொடுத்து ராமதாசை வாங்கி இருக்க வேண்டியது தானே. திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் கொள்கை கூட்டணி எங்களோடு கூட்டணி சேர்ந்தால் பண கூட்டணியா? யார் கூட்டணி அமைத்தாலும் நீதி வழங்க வேண்டியவர்கள் மக்கள்தானே நல்லவர்களை மக்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்கள் ஜெ.மறைவுக்குப் பிறகு மக்களுக்கு எது தேவையோ அதை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம்.

Advertisment

அதுபோல் இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் எந்த ஏழைகளுக்கும் பாதிப்பு இல்லை. ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு கிடைக்கிறது. விலைவாசி ஏறவில்லை. ஜாதிச் சண்டைகள் நடக்கவில்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகவில்லை அந்த அளவுக்கு முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது ஊர்ஊருக்கு ஊராட்சி சபைகூட்டத்தை ஸ்டாலின் கூட்டி உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் உங்கள் குறைகள் எல்லாம் போயிருக்கும் அப்படிப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை இந்த அரசு நடத்தவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்.

admk

இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள்தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால்தான்உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடத்த முடியவில்லை. தமிழகத்துக்கு உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்திருக்கிறார். அதுபோல் ஆறு வழிச்சாலை, பசுமை வீடுகள், சிங்கப்பூர் போல் சென்னையில் மெட்ரோ ரயில் வசதி விமானம் விரிவாக்கம் இப்படி பல திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் மோடி கொண்டுவந்திருக்கிறார் இதன் மூலம் தமிழகம் பெருமைப் பட்டு இருக்கிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மா இருந்தபோது 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றும் இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதுபோல் இடைத்தேர்தலில் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் இதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், அமைச்சர் சீனிவாசன் மகன்களான ராஜ்மோகன், வெங்கடேஷ் மற்றும் அர்பன் பேங் தலைவர் பிரேம், ஜெயராமன், பாரதி முருகன் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

modi admk dindugal srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe