Skip to main content

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Minister, Collector pays tribute to fishermen

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 600 இந்திய (தமிழக) மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை இன்னும் அடங்கவில்லை. இப்போது 4 மீனவர்கள் சென்ற படகை இடித்து மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் தான் மேலும் மேலும் தமிழக மீனவர்களை அச்சமின்றி இலங்கை கடற்படையினர் கொல்வதாகக் கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

18-ந் தேதி கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 214 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் 213 படகுகள் கரை திரும்பியது. ஒரு படகு மட்டும் காணவில்லை. அப்போது, "இலங்கை கடற்படை கப்பலை மீனவர்களின் படகில் இடித்து மூழ்கடித்துவிட்டார்கள். ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்குச் சொந்தமான படகில், அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), என்.சாம்(28), எஸ்.செந்தில்குமார்(32) ஆகிய 4 மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். சிறிதளவு மனிதாபிமானம் கூட இல்லாத இலங்கை கடற்படை, மீனவர்கள் மீளக்கூடாது என்பதற்காக படகு மூழ்கிய பகுதியிலேயே சுற்றிவந்தனர். அதனால் யாராலும் 4 மீனவர்களையும் காப்பாற்ற முடியவில்லை" என்றார்கள் சக மீனவர்கள்.

 

Minister, Collector pays tribute to fishermen

 

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி உறவினர்களும், மீனவர்களும் போராட்டக்குரல் கொடுத்த நிலையில், தேடுவதாக சொன்னார்கள். ஆனால் இலங்கை கடற்பகுதியில் முதலில் இரு சடலங்களும், பிறகு ஒவ்வொரு சடலமாக 4 சடங்களும் மீட்கப்பட்டது. இந்நிலையில் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காணாமல் போன மீனவர்களின் படகை இடித்து மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலை மறியல் போராட்டமும் செய்தனர்.

 

தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதலால் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 

ஆனால், இறந்த மீனவர்களின் சடலங்களை ஒப்படைக்கும் வரை கடலுக்குச் செல்லமாட்டோம் என்று மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று கோட்டைப்பட்டினம் மீனவர்களின் இரு படகுகளில் இலங்கை சென்று 4 மீனவர்களின் உடல்களைப் பெற்றுவந்தனர். மீனவர்களின் உடல்களைப் பெற்றுச் செல்ல அவர்களின் உறவினர்கள் அமரர் ஊர்திகளுடன் காத்திருந்தனர். மதியம் 2.30 மணிக்கு கரைக்கு கொண்டுவரப்பட்ட மீனவர்களின் உடல்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், ரெத்தின சபாபதி எம்.எல்.ஏ, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு மீனவர்களின் உடல்களை உறவினர் பெற்று சொந்த ஊர்களுக்குக் கொண்டு சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.