Minister Anbil Mahesh urges Education should be included in state list

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1976 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அறிவித்தபிறகு, மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் நீட் தேர்வால் அரியலூர் மாணவி உயிரிழந்த பிறகு இந்த கோரிக்கை மீண்டும் பேசு பொருளாக மாறியது. தொடர்ந்து தமிழக முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சியினர் என அனைத்து தலைவர்களும் கல்வியை மாநில பட்டியலில் திரும்பச் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனது சமூக வலைதள பக்கத்தில், “கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.

Advertisment

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.