ADVERTISEMENT

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை துவங்கிவைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

12:43 PM Oct 19, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இல்லம் தேடிக் கல்வி’ என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின் கீழ் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடியிருந்ததால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் செயலாக்கமானது, இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு, தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 14மணி நேரம் (தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னோட்ட அடிப்படையில் 12 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு செயல்படுத்தப்பட்டு, அதன் வாயிலாகக் கிடைக்கப் பெறும் சிறந்த கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அந்த 12 மாவட்டங்கள்: கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம். தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளிகள் என 4 நிலைகளில் செயல்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டமானது அரசுத் திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், பல்துறையைச் சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை அனைவருக்கும் கொண்டுசெல்ல கலைக்குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படுகின்றன. இதில் கிராம அளவில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். சைக்கிள் பேரணி, வீதி நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வலர்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப்போலவே, 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என வரையறுக்கப்படுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை நேற்று (18.10.2021) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்து விழாப் பேருரை ஆற்றினார். ‘இல்லம் தேடிக் கல்வி’ கையேடு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா இ.ஆ.ப. வெளியிட்டார். இத்திட்டத்திற்கென சேவையாற்ற விருப்பமுடைய மாவட்டங்களிலுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் வழியே கணினி மற்றும் Smart Phone மூலமாகவும், அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உள்ள Hi-Tech Labs மூலமாகவும் 18.10.2021 முதல் பதிவுசெய்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகச் செயல்படுத்தப்பட உள்ள இச்சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர்/ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாகக் கொண்டுசேர்க்கும் வகையிலும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான இலச்சினை (Logo with TagLine) மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இலச்சினை (Logo with Tag Line) உருவாக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து நகர், ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம்.

வயது வரம்பு ஏதும் இல்லை. போட்டியாளர்கள் தங்களின் இறுதிப் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் இலச்சினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொது மக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் வெற்றியாளருக்கு ரூபாய் 25,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் நோக்கங்கள்:

கரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல்.

பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்களின் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.

பள்ளிச் சூழலின் கீழ் மாணவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்துவதன் மூலமே மாணவர்கள் வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்புக்குச் செல்லும்போது அவர்கள் அதற்கு முழுத் தகுதி படைத்தவர்களாக தயார்படுத்துதல்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT