விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு - புதுப்பட்டியை நோக்கி 30 பயணிகளுடன் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, கிறிஸ்டியான் பேட்டை - போதர் குளம் கண்மாய் அருகே, பஸ் அதிவேகமாக வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதியதில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மினி பஸ்ஸில் பயணித்த வத்திராயிருப்பு, இந்து மேல்நிலைப் பள்ளியில் 12வது படிக்கும் வ.புதுப்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி ஆகிய 2 பள்ளி மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு வத்திராயிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.