Skip to main content

சவடு மண்ணுடன் லாரிகளைச் சிறைப்பிடித்த கனிமவள அதிகாரி... வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழிக்கும் காவல் நிலையம்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

mineral officers soil truck ramanathapuram district


உயர்நீதிமன்ற ஆணைய மீறி, உரிய அனுமதியின்றி சவடு மண் அள்ளிய இரு டிப்பர் லாரிகளை மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கனிமவள துறையினர் ஒப்படைத்த நிலையில், இன்று வரை வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருகின்றது உள்ளூர் காவல்துறை. இதனால் கனிமவளத்துறை வட்டாரத்தில் காவல்துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

 

mineral officers soil truck ramanathapuram district


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்டது உப்பூர் அனல் மின் நிலையம். 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில் நுட்பத்துடன், ரூ.12,200 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1,600 மெகா வாட் மின் உற்பத்திக்காக தலா 800 மெகா வாட் அலகுகள் அமைக்கும் பணி தமிழக அரசால் துவக்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த அனல் மின் நிலையப் பணிகளை லார்சன் & டர்போ (L&T), பெல் (BHEL) மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயலாற்றி வந்தாலும், இவர்களின் பணிகளைக் கண்காணிப்பது தமிழ்நாடு மின்வாரியமே. அனல் மின் நிலையங்களுக்கு கடல் நீரைக் கொண்டு வந்து, பின் அதனின் கழிவுகளை மீண்டும் கடலில் கொட்ட அனல் மின் நிலையத்திலிருந்து 7.8 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள லார்சன் & டர்போ நிறுவனம் தற்பொழுது 2 கி.மீ.தூரத்திற்கு மண்ணைக் கொட்டி பாதையை அமைத்து, பாலப் பாதையின் தொடர்ச்சிக்காக அருகிலுள்ள இடங்களில் அனுமதியின்றி அள்ளப்பட்ட சவடு மண்ணைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு உண்டு.
 

mineral officers soil truck ramanathapuram district


இந்நிலையில், லார்சன் & டர்போ நிறுவனத்திற்காக கடந்த 9- ஆம் தேதி தேதியன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், முனியசாமி கோவில் அருகில் உயர்நீதிமன்ற ஆணையை மீறி, உரிய அனுமதியின்றி இரண்டு டிப்பர் லாரிகளின் துணைக்கொண்டு சவடு மண்ணை அள்ளியது ஒரு டீம். இதுக்குறித்து அனுமதியின்றி மண்ணை அள்ளுகிறார்கள் எனத் தமிழ்நாடு மின்வாரியத்தினர் மூலமாக மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த கனிமவளத்துறையின் உதவி இயக்குநர் சபீதா சவடு மண்ணுடன் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து அருகிலுள்ள திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 
 

mineral officers soil truck ramanathapuram district

 

ஆனால், இன்று வரை இதுக் குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை காவல் நிலையத்தார். இதனால் கோபமடைந்த கனிம வளத்துறையினர் தங்களது மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அமைதிகாத்து வருகின்றனர். இதே வேளையில், "லார்சன் & டர்போ நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திலுள்ள சில அதிகாரிகள் துணை போவதாலே மணல் திருட்டு நடைப்பெற்று வருகின்றது. இதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் தொகையோ பல லட்சங்களுக்கு மேல் இருக்கும். இந்த லஞ்சம் அனைத்துத் துறைகளுக்கும் செல்வதால் தான் இதனை ஏனோ கண்டுகொள்ளவில்லை." என்கின்றனர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள். காவல் நிலைய வட்டாரமோ, "திருவாடனை டி.எஸ்.பி. இன்னும் வழக்குப் போட அனுமதிக்கவில்லை. அவர் கூறினால் மட்டுமே வழக்குப் போடுவோம்." என்கின்றனர்.

இது குறித்து விரிவான விளக்கத்தைத் தர வேண்டியது மாவட்டக் காவல்துறையின் பணி. விளக்கம் தருவார்களா எனக் கடுமையான விமர்சனங்களுடன் கேள்வியெழுப்புகின்றனர் கனிமவளத்துறையினர். விளக்கம் கிடைக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.