
திருவாரூரில் பால் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டில் புகுந்த நிலையில் வீட்டில் இருந்த கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட பலர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மூலங்குடி பகுதியில் பால் விநியோகம் செய்யும் தனியார் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. வாகனத்தை வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த ஓட்டு வீட்டுக்குள் புகுந்தது.
சுவரை உடைத்துக்கொண்டு வாகனம் உள்ளே சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் ஐந்து பேர் இருந்த நிலையில் அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் இருந்துள்ளார். எல்லோரும் வீட்டின் உள் பகுதியில் இருந்ததால் இந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்டதோடு இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சிவசங்கரனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.